Monday, June 4, 2012

நியாயமா? --- சிறுகதை

                      
பஸ்ஸில், கூட்டத்துக்கு நடுவே கொஞ்ச தூரத்தில் ஒரு முகம் என்னை அடிக்கடி பார்ப்பது போல இருந்தது. சற்று அறிமுகமான முகமாகவும் தெரிந்தது. நான் பார்ப்பதை அறிந்த அந்த முகமும் என்னைப் பார்த்து புன்னகைத்தது. மனம் உணருமுன்னமேயா....   என் உதடு அவன் பெயரை உச்சரித்து விட்டது. மூளை முதலில் உதட்டுக்குத்தான் செய்தியனுப்பியது போலும்! உதடு உச்சரித்ததும் மனமும் அவனை அடையாளம் கண்டது. 

      

"செங்குட்டுவன்... செங்குட்டுதானே?" 

     

"ஆமாம்... நானும் உன்னைப் பார்த்ததுமே ரவி மாதிரி இருக்கேன்னுதான் பார்த்துட்டே வந்தேன்..." உண்மையில் இவன் அண்ணன் சேரன்தான் என் வகுப்பு. இவர்களின் அப்பா தன் மகன்களுக்கு சேரன், செங்குட்டுவன் என்று அழகாகப் பெயர் வைத்திருந்தார். அப்போதெல்லாம் இவன், இன்னும் சில சிறிய வயது பையன்கள், குறிப்பாக என் வகுப்புத் தோழர்களின் தம்பிகளுடந்தான் என் விளையாட்டு இருந்தது!
                
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதான எங்கள் சிறு வயது நினைவுகளைப் பேசி, சேரனின் அலைபேசி எண், இருக்குமிடம் விவரங்கள் தெரிந்துகொண்டு, பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என் நிறுத்தம் முன்னதாகவே வந்ததால் விடைபெற்றுக் கொண்டு நான் இறங்கி விட்டேன்.   
                     
நான் சென்றுதான் கடையைத் திறக்க வேண்டும். நகரின் பிரபல மருந்துக் கடைக் கிளைகளில் ஒன்று அது. நான்தான் இன்சார்ஜ்.   என் கடையில் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும் வேலை பார்த்தார்கள். நான்தான் பொறுப்பு என்பதால் ஏதோ பெரிய லெவலில் நினைத்து விடாதீர்கள். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்! பி.எஃப், இ எஸ் ஐ பிடித்தம் போக எட்டாயிரத்து சொச்சம் கைக்குக் கிடைக்கும். அவ்வளவுதான். ஆனால் நாள் முழுக்க ஏ ஸியில் இருக்கலாம்! என் மனைவி ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அதில் கொஞ்சம் காசு வரும். கிட்டத்தட்ட ஆயா வேலை. ஆனால் உறவுகளிடமும் தெரிந்தவர்களிடமும் ஆசிரியை என்று சொல்லி வைத்திருக்கிறேன்! கௌரவம்! 
                
கடை திறந்து வழக்கமான ஊதுபத்தி, சூடச் சம்பிரதாயங்கள் முடிந்து, கொஞ்ச நேர வியாபாரங்கள் கவனித்த பிறகு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது. 
                 
"டேய்... ஹாட்சிப்ஸ்ல போய் ரெண்டு டீ வாங்கிட்டு வாடா...." சிறுவயது நண்பன் செங்குட்டுவனைச் சந்தித்தது மறுபடி ஞாபகம் வந்தது. கூடவே கணேஷ் நினைவும் வந்தது.
                   
செங்குட்டுவனைப் பார்த்த சந்தோஷத்தில் கணேஷுக்கு ஃபோன் செய்தேன். அவனும் என் சிறுவயதுத் தோழன்தான். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் தற்செயலாக இதே கடைக்கு வந்த போது ஆச்சர்யத்துடன் சந்தித்துக் கொண்டோம். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக அறிந்து கொண்டேன். கிட்டத் தட்ட என் லெவல். இந்த விவரம் எதற்கு என்கிறீர்களா.... சொல்கிறேன்.
                      
இந்த ஆறேழு வருடத்தில் நானும் கணேஷும் ஏழெட்டு முறை சந்தித்திருப்போம். அவ்வளவுதான். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ அலைபேசியில் அழைத்து சம்பிரதாயமாக வாழ்த்து சொல்லுவேன். அதுவும் நான்தான் செய்து கொண்டிருந்தேன். அவன் அழைக்க மாட்டான். அந்த வித்தியாசம் முதலில் நான் உணராமல் இருந்தேன். எனக்கு அந்த நாளில் அவனுடன் ஊர் சுற்றிய நாட்களும், பார்க் மணலில் மணிக் கணக்கில் பேசிக் கொண்டும், பல நாட்கள் பேச்சு தேவை இல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த நினைவுகளும் இருந்தன. அவனிடம் அவை இல்லை என்பதை அப்புறம் தெரிந்து  கொண்டேன்.
                       
"டேய்... சும்மா பழைய கதையை மட்டுமே பேசறேடா...."
                    
அப்புறம் அமைதியானேன். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பள்ளிக் காலத்துக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கிறோம். இடையில் வெவ்வேறு நண்பர் வட்டம் இருவருக்கும் அமைந்திருக்கும்தான். ஆனால் நாங்கள் வேறு என்ன பேசிக் கொள்ள முடியும்? இப்போது அவன் என்ன செய்கிறான், அவன் வீட்டு நிலவரம் குறித்தும் பேசுகிறேனே.... அப்புறம் ஏன் இப்படிக் கேட்கிறான்? அந்த பழைய நட்பு என்ன ஆனது? தொடர்ந்து சந்தித்துப் பேசிக் கொண்டால் தற்காலத்திலும் நெருக்கமாகப் பேச... முடியுமா.... என் சிந்தனையிலேயே அந்த வார்த்தை முற்றுப் பெறாமல் சந்தேகத்தில் தவித்தது. 
               
எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தென்ன...  காலம் இப்படி ஒரு இடைவெளியை உருவாக்க முடியுமா? அவன் மனைவி பற்றி, அவன் பிள்ளைகளைப் பற்றி, சம்பிரதாயமாக விசாரிக்க நானும் பழகிக் கொண்டேன். அவன் அதில் டிகிரி வாங்கியிருந்தான். விலகவும் முடியவில்லை. எதற்கு விலக வேண்டும்? விரோதம் ஒன்றும் இல்லை. நாங்கள் என்ன அடிக்கடியோ தினந்தோறுமோவா சந்திக்கிறோம்....? எப்போதோ ஒருமுறை சந்தர்ப்பம் வாய்ப்பு ஏற்படும் போது சந்திக்கிறோம். 
                        
செங்குட்டுவனைச் சந்தித்த விவரம் சொல்ல அவனைத்தான் அழைத்தேன். அவனும் ஆச்சர்யப் பட்டான். 
                 
"டெல்லியில் இல்லே இருந்தாங்க.... சேரன் எங்கிருக்கானாம்?"
                   
"சிங்கப்பூர்ல இருந்தானாம்.... இப்போ அவனும் சென்னைலதான் இருக்கானாம்.... ஏதோ கம்பெனி பெயர் சொன்னான். ஆடிட்டரா இருக்கானாம்."
                  
என்னைப் பழைய கதை பேசுபவன் என்று சொன்ன கணேஷ் கொஞ்சம் பழைய நினைவுகளுக்குப் போனான். 
                 
சேரனும் எங்களுக்கு நெருக்க நண்பன்தான். சீரியசாகப் பேசிக் கொண்டிருப்போம். அருகில் வந்து "ஓ... பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பன் ஜாயே..." என்று குர்பானி பாடலை இழுத்துப் பாடுவான். இப்போதும் குர்பானி பாடல் கேட்டால் சேரன் நினைவுடன் எனக்குப் புன்னகை வரும். இன்னொரு பாடல் மதன மாளிகைப் பாடல்.... 'அண்டர் த மாங்கோ ட்ரீ' என்ற உஷா உதுப் பாடலில் நடுவில் "மல்லிகைப் பூ..." என்று வரும். வெறுப்பேற்றுவது போல அருகில் வந்து,அந்த வரியை மட்டும் பாடுவான். சுதந்திரதின விழாவில் கோபால செட்டியாக வந்து தொப்பையுடன் வசனம் பேசிச் செல்லுவான். எங்களை முன்வரிசையில் பார்த்ததுமே அவனுக்குத் திக்கத் தொடங்கி விடும்! . அவன் பேசிய வசனத்தைச் சொல்லி நாங்கள் கிண்டல் செய்ய, கலங்கிய கண்களுடன் அடிக்க ஓடி வருவான். அப்புறம் சமாதானமாவோம்!
                
சிந்தனை இதிலும் செயல்கள் வியாபாரத்திலுமாகப் பொழுது ஓடிக் கொண்டிருந்தது.
                  
பல நாட்களுக்குப் பிறகு, சேரனின் அலைபேசி மூலமாக சஸ்பென்சாக ஒருநாள் பேசி அறிமுகம் செய்து கொண்டேன். நான் எதிர்பார்த்த உணர்வுப் பகிர்வு வரவில்லை. ரொம்ப ஜென்டிலாக சில கேள்விகள் வந்தன. விசாரித்த போது அவன் வேலை செய்யும் நிறுவனம் நான் இருக்கும் வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்று தெரிந்தது. 
                
ஒரு நாள் வந்தான். 
              
மனைவியிடமும் பெண்ணிடமும் சொல்லி வைத்திருந்தேன். வாசலில் வண்டி வந்து நின்றபோதே கவனித்தேன். உடையிலேயே ஒரு தோரணை தெரிந்தது; நடையிலும்!
              
"வா.......சேரன்....." அவன் தோற்றம் பார்த்ததுமே 'வா'க்கு அப்புறம் 'டா' தானாக வாய்க்குள்ளேயே கரைந்து போனது. 
               
பழசையே பேசுகிறேன் என்ற குற்றச்சாட்டை ஏற்கெனவே வாங்கியிருந்ததால் இவனிடம் கவனமாக  இருந்தேன். ஆனால் நாங்கள் பழகிய நாட்களும், அந்த ஜோக்குகளும் விளையாட்டும் மனதில் அலையைடித்ததைத் தாங்க முடியாமல்  அவனை நட்புடன் பார்த்தேன். அவன் பார்வையில் பதில் பாசத்தைத் தேடினேன். அவன் பார்வை வீட்டை அளவெடுத்துக் கொண்டிருந்தது. 
                
மனைவி, பெண் அறிமுகத்துக்குப் பின் அவன் என் வேலை பற்றியும் வருமானம் பற்றியும் பேசத் தொடங்கினான். ஷேர் என்றான். டீமேட் என்றான். ஒவ்வொரு மணித்துளியையும் வீண் செய்யாமல் எப்படி சம்பாதிக்கலாம், அவன் எப்படி சம்பாதிக்கிறான் என்பதைப் பற்றியே பேசினான். அவன் வீட்டு  ஏ ஸி பற்றிப் பேசினான். காரை மனைவி கொண்டு போவது பற்றிப் பேசினான். என்னை அதிகம் பேச விடவில்லை. நாங்கள் கொடுத்த காஃபியை எட்டிப் பார்த்து விட்டு இடது கை இரண்டு விரலால் பற்றி அரை மனதாய்க் குடித்தான். அடிக்கடி தனக்குத் தானே விசிறிக் கொண்டு மின்விசிறியை அதிருப்தியாய்ப் பார்த்தான். மனைவி "தோசை வார்க்கலாமா" என்று கேட்ட போது நாசூக்காய், ஆனால் திடமாய் மறுத்தான். இப்போது என் பழைய ஆர்வம் பறிபோய் இருந்தது. எப்போது இவன் கிளம்புவான், இந்த செயற்கை நாடகம் எப்போது முடிவுக்கு வரும் என்று மனதில் தோன்ற ஆரம்பித்தது. இப்படி நினைப்பது எனக்கே ஆச்சர்யமாகவும் வெட்கமாகவும், ஏன், வேதனையாகவும் கூட இருந்தது. 
                
ஏதோ ஒன்றை இழந்தது போலத் தோன்றியது. எதிர்பார்ப்பே எனது குற்றமோ என்று தோன்றியது.
                
வயது மாறியது போலவே நட்பும் மாறி விடுமா.... காலத்துடனேயே நினைவுகளும் அழிந்து விடுமா.... நான்தான் ரொம்ப எதிர்பார்க்கிறேனோ....  இவன் பணக்காரன் என்று தெரிகிறது... எனக்கு இவன் பணம் பெரிய பாதிப்பாகத் தெரியவில்லையே .... அப்போது கூட இவன் அப்பா தாசில்தார். என் அப்பா ஒரு சாதாரண குமாஸ்தாதான்... அப்போது இந்த வித்தியாசம் உறைக்கவில்லையே.... இப்போது மட்டும் ஏன்...?
                  
கிளம்பினான். முன்பெல்லாம் பிரிய மனமில்லாமல், அம்மாவின் "கதவையே அப்புறம் திறக்க மாட்டேன்" பயமுறுத்தல்களுக்குப் பின் அரை மனதாகப் பிரிந்து அவரவர் வீடு திரும்பும் அந்த நிகழ்வு இப்போது எனக்கு ஒரு விடுதலையாகப் பட்டது. ஏதோ ஒரு செயற்கைச் சூழலில் மூச்சுத் திணறலலிருந்து விடுபட்டு காற்றோட்டமான சூழலுக்கு வந்தது போல இருந்தது. 
                   
"இவர்தானே நீங்கள் சொன்ன அந்த குர்பானிப் பாட்டு நண்பர்... இப்போ..." ஏதோ சொல்ல வந்த மனைவி என் முகத்தைப் பார்த்து நிறுத்தி விட்டு, "ப்ரியா... சாப்பிட வா.... நேரமாவுது பார்... ஹோம்வொர்க் செய்யணும் வா..." என்றபடி உள்ளே சென்று விட்டாள். 
                      
என் மனைவியும், என் பெண்ணும் என்னை ஏதோ அனுதாபத்துடன் பார்ப்பது போலத் தோன்றியதால், சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி கொஞ்ச தூரம் நடக்கலாம் என்று வந்து விட்டேன். ஒருவேளை அது என் பிரமையாகவும் இருக்கலாம். என் அகத்தின் ஓட்டம் அவர்கள் முகத்தில் தெரிவதாக பயந்தேனோ என்னவோ.... 
                     
இப்போதைய நண்பர்களில் ஒரே ஒருவன் எனக்கு நெருக்கம். அவனுக்கு ஃபோன் பேசி வெவ்வேறு விஷயங்கள் பேசினேன்.  ஏனோ எனக்கு அது தேவையாய் இருந்தது.
                      
மறுநாள் கணேஷுக்கு ஃபோன் செய்து சேரன் வந்து சென்ற விஷயத்தை ஒரு சம்ப்ரதாயம் போலவே சொன்னேன். வேறு ஏதும் குறையாகப் பேசவில்லை. சேரனும் அப்புறம் ஃபோனிலும் பேசவில்லை. நேரிலும் மறுபடி வரவில்லை. 
                         
நானும் இவர்களோடெல்லாம் மறுபடி பேசவில்லை. காலம் மாற்றி விடும் மன உணர்வுகளைப் பற்றி, மறந்து விடும் பழசுகளை, நட்பைப் பற்றி அவ்வப்போது யோசனை ஓடும். அந்தஸ்து நட்பை மறக்கடித்து விடுகிறது என்று கசப்புடன் நினைத்துக் கொள்வேன். 
                  
கதை இங்கு முடிந்து விடுகிறதுதான். $$ ஆனால்.... 
                   
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு....

கடைக்குப் பெண்ணுடன் வந்து விட்ட மனைவியுடன் பெண்ணுக்கு சில பர்சேஸ் செய்ய கடைத்தெரு கிளம்பினேன். கடையில் வேலை செய்யும் பையன்களிடம் ஆயிரம் முறை எச்சரிக்கைச் சொல்லி பதினோரு மணிக்குத்தான் கடையை அடைக்கவேண்டும் என்று சொல்லி, பூட்டி, சாவியை வீட்டுக்குப் போகும் வழியில் என் வீட்டில் கொடுத்து விடச் சொல்லி விட்டுக் கிளம்பினேன். 
             
பர்சேஸ்கள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.  
   
வீடு திரும்ப மனைவி வலது புறம் திரும்ப, நான் அவளை நேராகச் செல்ல அழைத்தேன். 
            
"எதுக்குங்க சுத்திப் போகணும்.... இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துல வீடு சேர்ந்துடலாம்..."
         
"இல்லப்பா... நேராப் போனா கீரை இருந்தா வாங்கிப் போயிடலாம்...."
          
"சும்மா விடாதீங்க.... இதோ இங்க கிடைக்காத கீரையா.... தெரியுங்க.... அங்க உங்க இன்னொரு ஃபிரண்டு வேலை பார்க்கற கடை இருக்கு... டீக்கடைல வடை போடறவரு... அவரை அவாய்ட் செய்யணும் உங்களுக்கு... கடை என்ன கடை... தெருவில் கடை வச்சிருக்கார்... இதோ பாருங்க... இன்னிக்கி யாரோ தலைவர் வராருன்னு தெருக்கடைகளைத் திறக்க விடாம செஞ்சிருக்காங்க போலீஸ்காரங்க.... அபபடி என்ன உங்களுக்கு?...  அவரும் உங்கள் சிறுவயதுத் தோழர்தானே...."  
  

அவள் காட்டிய திசையில் தெருவோரக் கடைகள் இன்றி,  தலைமைத் தபால் நிலையம் ஒட்டிய தெரு பூரா சுத்தமாக இருந்தது. பேசாமல் அவள் பின் நடந்தேன். 
              
$$ கதை 'அங்கு' முடிந்தபின் ஆனாலுக்கு அப்புறம் படித்ததைப்  பிடிக்காதவர்கள், இந்தக் கடைசி பகுதியை மறந்து விடலாம்!   
         

Sunday, June 3, 2012

ஞாயிறு 152



என் கேள்விக்கென்ன பதில்? 

                

Friday, June 1, 2012

இளையராஜா....

     
சமீபத்தில் (விகடனில் என்று நினைவு...) ஒரு சிறுகதை படித்தேன். இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணையாதது ரசிகர்களுக்குச் செய்யும் துரோகம் என்ற கருவில். புதுமையாக, நன்றாக இருந்தது. சில பழைய பாடல்களைக் கேட்கும்போது, எனக்கும் அப்படித் தோன்றியதுண்டு. அவர்கள் படைப்பில் வெளிவந்த அந்தப் பாடல்களை அவர்களே கேட்கும்போது ஒருவரைப் பற்றி இன்னொருவர் நினைக்காமலா இருப்பார்கள் என்று அந்தக் கதையில் கேட்டிருந்தார்கள்..... ராஜமோகம், வாலிபதாகம்... மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.....
            
"அண்ணே... என்ன அண்ணே டைப் அடிச்சிகிட்டு இருக்கீங்க..."
               
"இளையராஜா பாட்டு பத்தி எழுதிட்டு நாலஞ்சு பாட்டுப் போடலாம்னுதாண்டா..."
                
"ஏண்ணே.. இங்க வந்து யார்ணே பா(ட்டு கே)க்கப் போறாங்க ...  வேணும்னா அவிங்கவிங்க வூட்லையே ரேடியோப் பொட்டி, பாட்டு மெஷினு வச்சிருக்காய்ங்க... அவிங்களுக்குப் பிடிச்ச பாட்ட அதுல கேப்பாய்ங்களா... அத விட்டுப் போட்டு இங்க வந்து கேப்பாய்ங்களா..."
                
"உன்ன எவண்டா இப்போ இங்கே கூப்பிட்டது...ச்சே... எழுதற மூடே ஸ்பாயில் பண்ணிட்டியே... நமக்குப் பிடிச்சுதுன்னு சொன்னா, இங்க வந்து கேக்கறாங்களோ இல்லையோ... என்ன பாட்டு பத்தி கதையளந்துருக்கோம்னு பாத்துட்டு அவங்களுக்குத் தோணினதைச் சொல்லிட்டுப் போவாங்கடா... நமக்குப் பிடிச்ச பாட்டு ஷேர் பண்ணினோம்னு ஒரு ஆத்ம திருப்திதாண்டா.... "
                   
"என்ன திருப்திண்ணே..."
                   
"ஆத்ம திருப்தி... ஏன் கேக்கறே?"
                
"ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல...சரி எழுதுங்கண்ணே...என்ன பாட்டுண்ணே மொதல்ல..?"
               
"நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்..."
           
"ஓ.. பாட்டுல ஒங்களக் கவர்ந்த வரி சொல்றீங்களாக்கும்.... தெரியும்ணே இந்தப் பாட்டு.... அந்தப் பெண்குரல் சுசீலாம்மாவோ, ஜானகியம்மாவோ  பாடியிருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சுப்பேன்..."
                   
"பாத்தியா.... இதாண்டா... உனக்கே ஏதோ சொல்லணும்னு தோணுது பாரு..."
              
"அடுத்துண்ணே....?"
              
"என்னில் நீயடி.... உன்னில் நானடி..."
               
"என்ன பாட்டுண்ணே..."
               
"பாரேன்..."

"யார்ணே அந்தப் பொண்ணு.... அப்புறம் வேற படத்துல ஒண்ணும் நடிக்கலையோ.... பாட்டு எஸ் பி பி குரலுக்காகவே கேக்கலாம்ணே... கார்த்திக் பாட்டு இன்னொன்னு கூட போடுங்கண்ணே..."
                  
"பூ பூ ன்னே வர்றா மாதிரி ஒரு பாட்டுடா.... கேளேன்... இளையராஜா என்ன போடு போட்டிருக்கார் பாரு.."

"சூப்பர்ணே.... அடுத்து..."
              
"பெண் குரல்ல ஒரு மெலடிடா.... "  
            
"மாலையில் யாரோ மனதோடு பேச..."

"அடுத்த பாட்டு... வேணும்னு செய்யாம பாட்டுக்காகப் போட்டா அதுவும் கார்த்திக்..  ஜேசுதாஸ் குரலும் ஜானகியம்மா குரலும் இளையராஜா டியூனும்.... செமப் பாட்டுடா... கேளேன்..."
       
"காற்று வான்கூறும் கருணையின் கவிதை..."

"அடுத்த பாட்டு.... "காலடி ஓசையிலே... யாழிசை கேட்டு வந்தேன்.. எஸ் பி பி குரலும் ஜானகியம்மா குரலும் இணைந்து.... அந்த ஆரம்ப ஆலாபனை இழையலைக் கேளேன்.... என்ன இனிமையான பாட்டு தெரியுமாடா.... என்னடா படிக்கிறே..."
          
"இங்களிஷ்ல பாட்டுக்கு நடுவுல எழுதிருக்காங்கண்ணே.... அது என்ன வரின்னு புரியுதான்னு பார்க்கறேன்..." "YOUR BODY IS SOFT AND IT IS IN GOLDEN COLOR! , "WHEN MEGALA DANCED IN THAT PLACE!..."   
              
"அண்ணே... ஆறு பாட்டாச்சுண்ணே..."
                  
"இருடா இன்னும் இருக்கு.."  
   
"அம்மாடி...   ஊரெல்லாம் போலி வேஷம்..."சோகமாவா முடிக்கறது... ஜாலியா ஒரு பாட்டு...  
     
."காதல் பாட்டுதான் பாடிக்கோ ...பாடிக்கோ..."
    
"போறும்ணே... அலுத்துடும்....பதிவு வேற ரொம்ப நீளமாப் போகுதுண்ணே... "
      
"டேய்...  இன்னும் நாலஞ்சு எடுத்து வச்சிருக்கேண்டா..."
     
"ஐயோ... போறும்ணே...  அலுத்துடும்... "
    
"இன்னும் ஒண்ணே ஒண்ணுடா.."
    
"போண்ணே... கேக்கறவங்களை நினைச்சிப் பாருண்ணே... உன்னப் பத்தியே யோசிக்கிறே..."
    
"............................................................"
   
"விடுண்ணே... இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்....அப்புறம் இன்னொண்ணு வழக்கமா சொல்வியே அத்தச் சொல்லி முடிண்ணே"
                     
"என்னடா...."
            
"அதான் காட்சி முக்கியம் இல்லை கானம்தான் முக்கியம்... அபபடி இப்படிம்பியே...."
                   
"அதான் நீயே சொல்லிட்டியே... சரி விடு அப்புறம் பார்க்கலாம்..."
               
"விடுண்ணே... இன்னொரு சந்தர்ப்பத்துல பார்க்கலாம்...."
     

Thursday, May 31, 2012

அலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா!

       
முந்தைய பதிவு சுட்டி << 
           
எக்மோரிலிருந்து புரசவாக்கத்திற்கு, ஒரு பஸ் பிடித்து, 'கங்காதீஸ்வரர் டாங்க்' நிறுத்தத்தில் இறங்கி, அண்ணன் வழி காட்ட, சுந்தரம் (பிள்ளைத்) தெருவில் இருக்கின்ற அண்ணன் வீட்டை அடைந்தோம். அந்த வீட்டில் மொத்தம் எட்டுக் குடித்தனங்கள் இருந்த ஞாபகம். நாங்கள் இருந்த முதல் மாடியில் ஐந்து குடித்தனங்கள் இருந்தன.
     
அண்ணி ஆசிரியை. புரசவாக்கம் முத்தையா செட்டியார் ப்ரிபரேட்டரி ஸ்கூலில் பணிபுரிந்து வந்தார். அங்கு படித்த எல்லோருக்கும் (கமல்ஹாசன், மஞ்சுளா, குமுதம் ஆசிரியர் குழுவில் இருந்த சில ஆசிரியர்களின் குழந்தைகள் என்று பெரிய பட்டியலே சொல்லுவார் என்னுடைய அண்ணி! கொஞ்சம் ரீலும் விடுவார். நான் இவர்களில் யாரையாவது சந்தித்தால் அண்ணி சொன்னது சரிதானா என்று அவர்களிடம் கேட்கவேண்டும் !) கீதா டீச்சரை ஞாபகம் இருக்கின்றதா என்று கேட்டால், அவர்கள் என் அண்ணியைப் பற்றிக் கூறுவார்கள்! 
     
அசோக் லேலண்டில் பெரிய பதவி வகித்துக் கொண்டிருந்த ஒருவர், (பெயர் தெரியும்; ஆனால் சொல்லமாட்டேன்!) நாகைக்கு லீவில் வந்திருந்தார். அவரை, என்னுடைய அப்பாவின் முதலாளிக்குத் தெரியும். அந்த முதலாளியின் சிபாரிசின் பெயரில், நாங்கள் (அப்பாவும் நானும்) அவரைச் சென்று பார்த்தோம். அவரிடம் அசோக் லேலண்டில் எனக்கு அப்ரெண்டிஸ் ஆக சேர) எழுத்துத் தேர்வுக்கு அழைப்பு வந்துள்ள விவரத்தைக் கூறினோம். (ஹி ஹி கூறினோம் இல்லை - கூறினார், என் அப்பா. எனக்கு அப்பொழுதெல்லாம் அதிகம் பேச வராது! ) அவர் என்னிடம் சில கேள்விகள் கேட்டார். அசோக் லேலண்டில் நாங்கள் என்ன உற்பத்தி செய்கிறோம் தெரியுமா? என்று கேட்டார். 'லாரி, பஸ்' என்றேன். "Commercial vehicles. Our product name is Comet. Prepare well for quiz type questions" என்றார். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் மேற்கொண்டு ஏதாவது செய்யமுடியும்" என்றார். 
    
அந்தக் காலத்தில், நாகப்பட்டினம் (போன்ற பகுதிகளில்) பாலிடெக்னிக் படித்து, மூன்றாவது ராங்க் எடுத்த எனக்கும், முதல் ராங்க் எடுத்த பக்கிரிசாமி, இரண்டாம் ராங்க் எடுத்த கருணாநிதி போன்ற என் நண்பர்களுக்கும், competitive exams என்றால் என்ன என்றே தெரியாது. எங்களுக்குத் தெரிந்த கடினமான கணிதக் கேள்வி, காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால், காசுக்கு எவ்வளவு வாழைக்காய்? என்பதுதான். (இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள், காசுக்கு எவ்வளவு வாழைக்காய் என்று பின்னூட்டத்தில் சொல்லலாம்). அந்தக் காலத்தில் கால்குலேட்டர்கள் கூடக் கிடையாது!  . 
    
அண்ணனிடம், competitive exam விவரங்கள் பற்றி நான் கூறியவுடன், அவருடைய அலுவலகத்தில் (Kilpauk Medical College Hospital Administration) சர்க்குலேஷன் லைப்ரரியில் இருந்து, Competition  Success Review புத்தகத்தின் நடுவில், சிறிய அளவில் இருக்கும் பகுதியில் இருக்கின்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னிடம் கொடுத்துப் படித்து பதில்கள் அளிக்கச் சொன்னார். அது மாதாந்திர பத்திரிக்கை என்று நினைக்கின்றேன். பழைய CSR பத்திரிக்கைகளின் நடுப் பகுதிகளையும், (சர்க்குலேஷன் முடிந்து புத்தகக் கடைக்கு எடைக்கு போட வைத்திருந்த) புத்தகங்களிலிருந்து கிழித்துக் கொடுத்தார். ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஒரு வாரத்திற்குள் படித்து, தயார் செய்துகொண்டேன். 
             
அப்ரெண்டிஸ் எழுத்துத் தேர்வுக்கு, இந்த கேள்விகள் எல்லாம் பெரிதும் உதவின. அதே வகைக் கேள்விகள் அந்த Written exam கேள்வித் தாளில் நிறைய வந்திருந்தன. அந்த நாட்களில் Quiz type கேள்விகள் என்றால் என்ன என்றே தெரியாதிருந்த எனக்கு Competition Success Review என்ற புத்தகத்தையும், அதன் நடுப் பகுதியையும், கேள்விகளையும், அறிமுகம் செய்து, அண்ணன் காட்டிய வழி, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 

=================================== 

அசோக் லேலண்டின் அசெம்பிளி பிரிவில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி பிரிவில், ஜான் என்று வயதான நண்பர். 
 
  
ஸ்டீரிங் பாக்ஸ் அசெம்பிளி என்பது பார்ப்பதற்கு சுலபமாகத் தோன்றும். ஆனால், கை சக்கரத்தை (steering wheel) சுற்றும் பொழுது, தரை சக்கரத்தை (Road wheel) இயக்குகின்ற Cam & Roller மெக்கானிசம் சரியாக செட் செய்வது மிகவும் கடினமான வேலை. அந்த வேலைக்கு யாராலும் 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்று செய்முறை எழுதமுடியாது. ஸ்டீரிங் வீலில் இவ்வளவு டார்க் கொடுத்தால், அது இயங்கவேண்டும் (இணைப்புகள் இல்லாத பொழுது, இணைப்புகள் இணைத்த பிறகு, வண்டி முழு லோட் செய்த பிறகு என்று பல கட்டங்கள் உண்டு.) என்று சொல்ல முடியுமே தவிர, அதை எப்படி வரவழைப்பது என்பது யாராலும் சொல்லமுடியாது. அவைகளை சரியாக வரவழைக்க ஜான் ஒருவரால் மட்டுமே முடியும். அதற்கு Shims adjustment என்று பெயர். ஜான் அவர்களின் தாரக மந்திரம், 'கண் குன்சு, கை ஃபீலிங்' என்பது. மனிதர் ஸ்டீரிங் அட்ஜஸ்ட் செய்ய வந்தால், இப்படி ஒரு தட்டு, அப்படி ஒரு தட்டு, இங்கேயிருந்து இரண்டு ஷிம் எடுத்து அந்தப் பக்கம், மீண்டும் சில தட்டுகள், சுத்தியல் கொண்டு ஸ்டீரிங் ஷாப்டில் கொஞ்சம் அடி, ராக்கர் ஷாப்டில் கொஞ்சம் தட்டுவார். ஸ்டீரிங் செட் ஆகிவிடும். 


ஜான் ரொம்ப வருடங்கள் முன்பே ரிட்டையர் ஆகிவிட்டார். தக்ஷிணாமூர்த்தி என்று ஒரு சிஷ்யரை நன்றாகத் தயார் செய்திருந்தார். அவரும் என்னுடைய நண்பர். விரைவில் நாங்கள் இந்த வகை ஸ்டிரிங் பெட்டிகளுக்கும் ஓய்வு கொடுக்கவேண்டி வந்தது. 
      
ஜான் மாதிரி ஆட்கள், அ லே வில் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு யூனிட்டிலும், உண்டு. அவர்கள்தான் அசோக் லேலண்டின் இராஜ அச்சுகள் (King pins) என்று சொல்லலாம். 
===================================  
   
கொசுறு: 
         
நேற்று எங்களுக்காக Xylo வாடகை கார் (Taxi for sure) ஓட்டிய பால் என்னும் ஓட்டுனர் என்னிடம் கேட்டார், "சார் நீங்க அசோக் லேலண்ட் எண்ணூர்ல வொர்க் பண்ணிணீங்களா? நான் எர்ணாவூர் பாரதி நகர்தான் சார். அந்நியன் ஷூட்டிங் எடுத்தாங்களே, அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில்தான் வீடு. உங்களுக்கு இருதயராஜ் தெரியுமா? என்னுடைய சித்தப்பா சார் அவரு." 
     
நான் சொன்னேன் "எனக்கு அசோக் லேலண்டில் இரண்டு இருதயராஜ் தெரியும். ஒருவர் எலெக்ட்ரிகல் பிரிவு. இன்னொருவர் பைலட் ப்ரொடக்ஷன் பிரிவு கிளார்க். நீங்கள் சொல்வது யாரு". பால் உடனே "அவர் அசோசியேஷன் செக்ரட்டரி சார்!" என்றார். .
              
எனக்கு இப்போ அசோக் லேலண்டில் மூன்று இருதயராஜ்களைத் தெரியும்!    
       

Tuesday, May 29, 2012

அபிராமி....அபிராமி....


சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திருக்கடையூர்.

உறவினர் ஒருவரின் அறுபதாம் கல்யாணம்.


பெரிய மாற்றம் எதுவுமில்லை. பேட்ச் பேட்ச் ஆக நின்று வரிசையாக உள் நுழைந்து யானையின் (அபிராமி) தலைமையில் உள் சென்று அறுபதாம் கல்யாணம், பீமரத சாந்தி, சதாபிஷேகம் செய்து திரும்புகிறார்கள். 



முன்னர் இருந்த அபிராமி இல்லையாம் இவள். புதிய யானை.



அபிராமிக்கு ஓயாத வேலை, உழைப்பு. சளைக்காமல் உள்ளுக்கும் வெளிக்கும் நடந்து 60, 70, 80 ஆம் கல்யாணங்கள் செய்து கொள்ள வந்திருப்போரை உள்ளே அழைத்துச் சென்று விட்டு விட்டு அடுத்தவரை அழைக்க வாசலுக்கு வந்து.....



மதியம் ரெஸ்ட். அப்போது சம்பாதிக்கும் வேலையிலும் உணவு உண்ணும் வேலையிலும் பிசி!


குரங்கார் ஒருவர் அங்கிருந்த கடையிலிருந்து ஒரு சீப்பு வாழைப் பழத்தை நொடியில் கவர்ந்து கோவில் மதிலில் ஏறினார்..(ஏறினாள்!).


படமெடுப்பதைப் பார்த்ததும் இன்னும் மேலேறிச் சென்று விட்டாள்.

வாசலில் அமர்ந்திருக்கும் யாசகர்கள் ஒரு சிறப்பு வார்த்தை உபயோகித்து அட்டாக் செய்து யாசகம் கேட்கிறார்கள். "நீங்க அமோகமா இருப்பீங்க.... உங்க குடும்பமே அமோகமா இருக்கும்..."



குரங்கைப் படமெடுக்கும்போது முதலில் ஒரு யாசகர், அப்புறம் ஒருவர், அப்புறம் ஒருவர் என்று பெரிய கும்பலால் சூழப் பட்டேன்.



"இவ்வளவு பேர் இருக்கோமேன்னு பார்க்கறீங்களா... ஒருத்தர் கிட்டக் குடுங்க... நாங்க பிரிச்சிப்போம் சாமி....அமோகமா இருப்பீங்க...!"

தங்குமிடத்திலிருந்து சாப்பாடு வரை எல்லாம் வியாபாரம்!

அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தவனம்....



திருமணத்தை வீடியோ எடுப்பது, படமெடுப்பது எல்லாம் செய்தாக வேண்டுமென்பதால் உள்ளே கேமிரா எடுத்துப் போவதில் சிரமமில்லை. படமெடுக்கவும் தடையில்லை. நாங்கள் சென்றிருந்த நேரம் நடிகை ரேவதி சங்கரன் வந்திருந்தார்.

பிரகாரம்...





கேமிரா ரீசார்ஜ் பேட்டரி சரியாக வேலை செய்யவில்லை. டியூரசெல் பேட்டரிக்கு அலைந்தால் அப்புறம்தான் தெரிந்தது அங்கிருக்கும் மளிகைக் கடைகள் எல்லாவற்றிலும் கிடைக்காத விஷயமே இல்லை. டியூரசெல்லில் இருபது படங்கள்தான் எடுக்கமுடிவது ஒரு சோகம்!


அபிராமியின் (யானை)அருகிலிருந்து கோபுரம்....

அம்மன் சன்னதி...


கஜபூஜை போல கோ பூஜை....


ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுக்க முடிகிறது. மாடியுடன் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் வாடகை. கீழே ஹால் முழுக்க A/C. மாடியில் இரண்டு அறைகள் A/C. அங்கு ஒரு ஹால். மேலும் கீழும் சேர்த்து எழுபது எண்பது பேர் வரை தங்கலாம்! கீழேயும் இரண்டு அறைகள்.  இது போலத் தங்குமிடங்கள் நிறைய அங்கு!  லாட்ஜுகளும் உண்டு. 


பூஜையில் வைக்கப் பட்ட மரகத லிங்கம்....


தங்கியிருந்த இடத்திலிருந்து பக்கவாட்டில் கோபுரம்.



திருக்கடையூர் செல்லும் வழியில் அண்ணன் பெருமாள் கோவில் என்ற முப்பத்தெட்டாவது திவ்ய தேசம் பற்றி தனிப் பதிவில்!


Sunday, May 27, 2012

ஞாயிறு - 151


Friday, May 25, 2012

எட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா!


                    

கே வி: "என் மனைவி குழந்தையின் பெயர் 'மாயா' என்று வைக்கலாமா என்று கேட்டவுடன், நான் அதிசயித்துப் போனேன். ஆனால், மாயா, பிங்கி இருவரும் என்னைத் தொடர்ந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை. 'போதும் இந்த மாயா பிங்கி விவகாரங்கள். அவர்களை என் குடும்பத்திற்குள் நான் அனுமதிக்கத் தயாராக இல்லை' என்று நினைத்தேன். மனைவியிடம், 'மாயா - பாயா, பிங்கி - சொங்கி' என்றெல்லாம் எந்தப் பெயரும் வேண்டாம் என்றேன். என் பெண்ணுக்கு கூகிளில் தேடி, விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகையின் பெயரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். "
           
எ சா: "Anushka?"
            
கே வி: "No. ANOOSKA"  
      
எ சா: "சுத்தம்!" 
           
கே வி: "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" 
            
எ சா: "உங்களுக்கு நியூமராலாஜி தெரியுமா?"
               
கே வி: "தெரியாது" 
             
எ சா: "MAAYA, PINKI / PINKY, ANOOSKA - எல்லாப் பெயர்களுக்கும் கூட்டுத் தொகை எட்டு வருகின்றது." 
             
கே வி: "அதனால் என்ன?"
             
எ சா: "இன்று காலை நொச்சூர் வெங்கட்ராமன் என்பவர் கூறிய உபன்யாசம் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் பூஜ்யம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுள்; எட்டு என்பது மாயா, மாயை. என்றார். எட்டு என்பது மாயச் சுழல் - இரண்டு பூஜ்யங்கள், ஒன்று கடிகார சுற்றாகவும், மற்றது அதற்கு எதிர் திசையிலும் அமையும் சுற்றாகவும் அமைந்த உழல் சக்கரம்' என்றார்" 
                   
கே வி: "ஆச்சரியமாக இருக்கின்றதே! மாயாவுக்கும் எட்டுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றனவா?"
             
எ சா: "ஆமாம். நீங்கள் இங்கு வந்து என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே, பல எட்டுகள் இங்கே வந்து விழ ஆரம்பித்தன. KV, 08-08-2008, 8th floor, Desh (Raaga), Maaya, Date of birth: 08-08-1970 8 pm, Date of death: 08-08-2006 08:08 AM, OA, Pinki, Anooska என்று பல எட்டுகள். (ஒருவேளை ஜீவி சார் இன்னும் சில எட்டுகள் கண்டு பிடித்திருந்தால் அவைகளும் சேரும்!)   அதெல்லாம் போகட்டும். நீங்கள் என்னைத் தேடி வந்ததின் காரணம் என்ன? அதைச் சொல்லுங்கள். 
             
கே வி: "மாயாவின் ஆவி கூறிய கதையில், ஒரே ஒரு இடத்தில் உங்கள் பெயரைக் கூறி இருந்தார். ஜோதிட வைத்தியரின் சிஷ்யர் என்றும் கூறினார். அப்புறம் அந்தப் பெயர் மறந்து போயிருந்தது. நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம், என்னை இங்கே கொண்டு வந்தது என்று சொல்ல வேண்டும். "
         
எ சா: "அது என்ன சம்பவம்?"  
      
கே வி: "எனக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். பெரியவன் பெயர் அர்விந்த். அடுத்துப் பிறந்தவள்தான், அநூஷ்கா. இப்போ அநூஷ்கா ஆறுமாதக் குழந்தை. நேற்று ஆபீசில், இந்தூர் ஆபீஸ் பற்றி, பாட்டியா விசாரணை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். எம் டி இந்தூர் கோர்ட்டில் ஆஜராகி, பாட்டியா சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. எம் டி யுடன், அவருடைய பி ஏ, ஸ்ரீவத்சன் என்ற என் நண்பரும் இந்தூர் சென்றிருந்தார். ஸ்ரீ வத்சனிடம், நான், மாயா ஹோட்டல் பற்றியும், பெரியவர் கோவிந்தராஜன் எனக்கு உதவியதையும் (மட்டும்) கூறி, அங்கு அவரைச் சந்தித்தால், அவரை நான் மிகவும் கேட்டதாக சொல்லவேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தேன். ஸ்ரீவத்சன் இந்தூரிலிருந்து என்னுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசும்பொழுது, 'கோவிந்தராஜன் தினமும் ஜெயிலுக்குப் போய் வருவதாகவும், அவருடைய முதலாளி ஓ ஏ என்பவர் ஜெயிலில் இருப்பதாகவும், அவர் மீது, பிங்கி என்பவரை விஷ மாத்திரை கொடுத்து கொன்றதாக வழக்கு என்றும், பிங்கி இறந்ததற்கான காரணம், அவர் குடித்த கோக்க கோலா பானத்தில் விஷம் கலந்து இருந்தது, அதே விஷ மாத்திரை, ஓ ஏ வின் அறையில், கண்டெடுக்கப்பட்டதால், ஓ ஏ கைது செய்யப் பட்டு, சிறையில் இருக்கின்றார்' என்றும் சொன்னார். " 
     
எ சா: "என்னது? கோக்க கோலாவை பிங்கி குடித்தாளா! அதே மாத்திரை ஓ ஏ ரூமில் ..... ஓ! அது மாயா கையிலிருந்து விழுந்து மாயமாக மறைந்த மாத்திரையா!! அடக் கடவுளே!" 
    
(தொடரும்)