பஸ்ஸில், கூட்டத்துக்கு நடுவே கொஞ்ச தூரத்தில் ஒரு முகம் என்னை
அடிக்கடி பார்ப்பது போல இருந்தது. சற்று அறிமுகமான முகமாகவும் தெரிந்தது.
நான் பார்ப்பதை அறிந்த அந்த முகமும் என்னைப் பார்த்து புன்னகைத்தது. மனம்
உணருமுன்னமேயா.... என் உதடு அவன் பெயரை உச்சரித்து விட்டது. மூளை முதலில்
உதட்டுக்குத்தான் செய்தியனுப்பியது போலும்! உதடு உச்சரித்ததும் மனமும்
அவனை அடையாளம் கண்டது.
"செங்குட்டுவன்... செங்குட்டுதானே?"
"ஆமாம்... நானும் உன்னைப்
பார்த்ததுமே ரவி மாதிரி இருக்கேன்னுதான் பார்த்துட்டே வந்தேன்..."
உண்மையில் இவன் அண்ணன் சேரன்தான் என் வகுப்பு. இவர்களின் அப்பா தன்
மகன்களுக்கு சேரன், செங்குட்டுவன் என்று அழகாகப் பெயர் வைத்திருந்தார்.
அப்போதெல்லாம் இவன், இன்னும் சில சிறிய வயது பையன்கள், குறிப்பாக என்
வகுப்புத் தோழர்களின் தம்பிகளுடந்தான் என் விளையாட்டு இருந்தது!
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதான எங்கள் சிறு வயது நினைவுகளைப்
பேசி, சேரனின் அலைபேசி எண், இருக்குமிடம் விவரங்கள் தெரிந்துகொண்டு, பரஸ்பர குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என் நிறுத்தம் முன்னதாகவே
வந்ததால் விடைபெற்றுக் கொண்டு நான் இறங்கி விட்டேன்.
நான்
சென்றுதான் கடையைத் திறக்க வேண்டும். நகரின் பிரபல மருந்துக் கடைக்
கிளைகளில் ஒன்று அது. நான்தான் இன்சார்ஜ். என் கடையில் இரண்டு பையன்களும்
ஒரு பெண்ணும் வேலை பார்த்தார்கள். நான்தான் பொறுப்பு என்பதால் ஏதோ பெரிய
லெவலில் நினைத்து விடாதீர்கள். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்! பி.எஃப், இ
எஸ் ஐ பிடித்தம் போக எட்டாயிரத்து சொச்சம் கைக்குக் கிடைக்கும்.
அவ்வளவுதான். ஆனால் நாள் முழுக்க ஏ ஸியில் இருக்கலாம்! என் மனைவி ஒரு
தனியார் பள்ளியில் வேலை பார்த்து, அதில் கொஞ்சம் காசு வரும். கிட்டத்தட்ட
ஆயா வேலை. ஆனால் உறவுகளிடமும் தெரிந்தவர்களிடமும் ஆசிரியை என்று சொல்லி
வைத்திருக்கிறேன்! கௌரவம்!
கடை திறந்து வழக்கமான ஊதுபத்தி, சூடச் சம்பிரதாயங்கள் முடிந்து, கொஞ்ச நேர வியாபாரங்கள் கவனித்த பிறகு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது.
"டேய்... ஹாட்சிப்ஸ்ல
போய் ரெண்டு டீ வாங்கிட்டு வாடா...." சிறுவயது நண்பன் செங்குட்டுவனைச்
சந்தித்தது மறுபடி ஞாபகம் வந்தது. கூடவே கணேஷ் நினைவும் வந்தது.
செங்குட்டுவனைப் பார்த்த சந்தோஷத்தில் கணேஷுக்கு ஃபோன் செய்தேன்.
அவனும் என் சிறுவயதுத் தோழன்தான். ஆறேழு வருடங்களுக்கு முன்னால் தற்செயலாக
இதே கடைக்கு வந்த போது ஆச்சர்யத்துடன் சந்தித்துக் கொண்டோம். அவன் ஒரு
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக அறிந்து கொண்டேன். கிட்டத்
தட்ட என் லெவல். இந்த விவரம் எதற்கு என்கிறீர்களா.... சொல்கிறேன்.
இந்த ஆறேழு வருடத்தில் நானும் கணேஷும் ஏழெட்டு முறை சந்தித்திருப்போம்.
அவ்வளவுதான். தீபாவளிக்கோ பொங்கலுக்கோ அலைபேசியில் அழைத்து சம்பிரதாயமாக
வாழ்த்து சொல்லுவேன். அதுவும் நான்தான் செய்து கொண்டிருந்தேன். அவன் அழைக்க
மாட்டான். அந்த வித்தியாசம் முதலில் நான் உணராமல் இருந்தேன். எனக்கு அந்த
நாளில் அவனுடன் ஊர் சுற்றிய நாட்களும், பார்க் மணலில் மணிக் கணக்கில்
பேசிக் கொண்டும், பல நாட்கள் பேச்சு தேவை இல்லாமல் அருகருகே அமர்ந்திருந்த
நினைவுகளும் இருந்தன. அவனிடம் அவை இல்லை என்பதை அப்புறம் தெரிந்து
கொண்டேன்.
"டேய்... சும்மா பழைய கதையை மட்டுமே பேசறேடா...."
அப்புறம்
அமைதியானேன். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பள்ளிக்
காலத்துக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கிறோம்.
இடையில் வெவ்வேறு நண்பர் வட்டம் இருவருக்கும் அமைந்திருக்கும்தான். ஆனால்
நாங்கள் வேறு என்ன பேசிக் கொள்ள முடியும்? இப்போது அவன் என்ன செய்கிறான்,
அவன் வீட்டு நிலவரம் குறித்தும் பேசுகிறேனே.... அப்புறம் ஏன் இப்படிக்
கேட்கிறான்? அந்த பழைய நட்பு என்ன ஆனது? தொடர்ந்து சந்தித்துப் பேசிக்
கொண்டால் தற்காலத்திலும் நெருக்கமாகப் பேச... முடியுமா.... என் சிந்தனையிலேயே
அந்த வார்த்தை முற்றுப் பெறாமல் சந்தேகத்தில் தவித்தது.
எவ்வளவு
நெருக்கமான நண்பர்களாக இருந்தென்ன... காலம் இப்படி ஒரு இடைவெளியை உருவாக்க
முடியுமா? அவன் மனைவி பற்றி, அவன் பிள்ளைகளைப் பற்றி, சம்பிரதாயமாக விசாரிக்க நானும்
பழகிக் கொண்டேன். அவன் அதில் டிகிரி வாங்கியிருந்தான். விலகவும்
முடியவில்லை. எதற்கு விலக வேண்டும்? விரோதம் ஒன்றும் இல்லை. நாங்கள் என்ன
அடிக்கடியோ தினந்தோறுமோவா சந்திக்கிறோம்....? எப்போதோ ஒருமுறை சந்தர்ப்பம்
வாய்ப்பு ஏற்படும் போது சந்திக்கிறோம்.
செங்குட்டுவனைச் சந்தித்த விவரம் சொல்ல அவனைத்தான் அழைத்தேன். அவனும் ஆச்சர்யப் பட்டான்.
"டெல்லியில் இல்லே இருந்தாங்க.... சேரன் எங்கிருக்கானாம்?"
"சிங்கப்பூர்ல இருந்தானாம்.... இப்போ அவனும் சென்னைலதான் இருக்கானாம்.... ஏதோ கம்பெனி பெயர் சொன்னான். ஆடிட்டரா இருக்கானாம்."
என்னைப் பழைய கதை பேசுபவன் என்று சொன்ன கணேஷ் கொஞ்சம் பழைய நினைவுகளுக்குப் போனான்.
சேரனும்
எங்களுக்கு நெருக்க நண்பன்தான். சீரியசாகப் பேசிக் கொண்டிருப்போம்.
அருகில் வந்து "ஓ... பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பாத் பன் ஜாயே..."
என்று குர்பானி பாடலை இழுத்துப் பாடுவான். இப்போதும் குர்பானி பாடல்
கேட்டால் சேரன் நினைவுடன் எனக்குப் புன்னகை வரும். இன்னொரு பாடல் மதன
மாளிகைப் பாடல்.... 'அண்டர் த மாங்கோ ட்ரீ' என்ற உஷா உதுப் பாடலில் நடுவில்
"மல்லிகைப் பூ..." என்று வரும். வெறுப்பேற்றுவது போல
அருகில் வந்து,அந்த வரியை மட்டும் பாடுவான். சுதந்திரதின விழாவில் கோபால
செட்டியாக வந்து தொப்பையுடன் வசனம் பேசிச் செல்லுவான். எங்களை
முன்வரிசையில் பார்த்ததுமே அவனுக்குத் திக்கத் தொடங்கி விடும்! . அவன்
பேசிய வசனத்தைச் சொல்லி நாங்கள் கிண்டல் செய்ய, கலங்கிய கண்களுடன் அடிக்க
ஓடி வருவான். அப்புறம் சமாதானமாவோம்!
சிந்தனை இதிலும் செயல்கள் வியாபாரத்திலுமாகப் பொழுது ஓடிக் கொண்டிருந்தது.
பல நாட்களுக்குப் பிறகு, சேரனின் அலைபேசி மூலமாக சஸ்பென்சாக ஒருநாள் பேசி அறிமுகம் செய்து கொண்டேன். நான்
எதிர்பார்த்த உணர்வுப் பகிர்வு வரவில்லை. ரொம்ப ஜென்டிலாக சில கேள்விகள்
வந்தன. விசாரித்த போது அவன் வேலை செய்யும் நிறுவனம் நான் இருக்கும்
வீட்டைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்று தெரிந்தது.
ஒரு நாள் வந்தான்.
மனைவியிடமும் பெண்ணிடமும் சொல்லி
வைத்திருந்தேன். வாசலில் வண்டி வந்து நின்றபோதே கவனித்தேன். உடையிலேயே ஒரு
தோரணை தெரிந்தது; நடையிலும்!
"வா.......சேரன்....." அவன் தோற்றம் பார்த்ததுமே 'வா'க்கு அப்புறம் 'டா' தானாக வாய்க்குள்ளேயே கரைந்து போனது.
பழசையே பேசுகிறேன் என்ற குற்றச்சாட்டை ஏற்கெனவே வாங்கியிருந்ததால்
இவனிடம் கவனமாக இருந்தேன். ஆனால் நாங்கள் பழகிய நாட்களும், அந்த
ஜோக்குகளும் விளையாட்டும் மனதில் அலையைடித்ததைத் தாங்க முடியாமல் அவனை
நட்புடன் பார்த்தேன். அவன் பார்வையில் பதில் பாசத்தைத் தேடினேன். அவன்
பார்வை வீட்டை அளவெடுத்துக் கொண்டிருந்தது.
மனைவி, பெண் அறிமுகத்துக்குப் பின் அவன் என் வேலை பற்றியும் வருமானம்
பற்றியும் பேசத் தொடங்கினான். ஷேர் என்றான். டீமேட் என்றான். ஒவ்வொரு
மணித்துளியையும் வீண் செய்யாமல் எப்படி சம்பாதிக்கலாம், அவன் எப்படி
சம்பாதிக்கிறான் என்பதைப் பற்றியே பேசினான். அவன் வீட்டு ஏ ஸி பற்றிப்
பேசினான். காரை மனைவி கொண்டு போவது பற்றிப் பேசினான். என்னை அதிகம் பேச
விடவில்லை. நாங்கள் கொடுத்த காஃபியை எட்டிப் பார்த்து விட்டு இடது கை
இரண்டு விரலால் பற்றி அரை மனதாய்க் குடித்தான். அடிக்கடி தனக்குத் தானே
விசிறிக் கொண்டு மின்விசிறியை அதிருப்தியாய்ப் பார்த்தான். மனைவி "தோசை
வார்க்கலாமா" என்று கேட்ட போது நாசூக்காய், ஆனால் திடமாய் மறுத்தான்.
இப்போது என் பழைய ஆர்வம் பறிபோய் இருந்தது. எப்போது இவன் கிளம்புவான், இந்த
செயற்கை நாடகம் எப்போது முடிவுக்கு வரும் என்று மனதில் தோன்ற ஆரம்பித்தது.
இப்படி நினைப்பது எனக்கே ஆச்சர்யமாகவும் வெட்கமாகவும், ஏன், வேதனையாகவும்
கூட இருந்தது.
ஏதோ ஒன்றை இழந்தது போலத் தோன்றியது. எதிர்பார்ப்பே எனது குற்றமோ என்று தோன்றியது.
வயது மாறியது போலவே நட்பும் மாறி விடுமா.... காலத்துடனேயே நினைவுகளும்
அழிந்து விடுமா.... நான்தான் ரொம்ப எதிர்பார்க்கிறேனோ.... இவன் பணக்காரன்
என்று தெரிகிறது... எனக்கு இவன் பணம் பெரிய பாதிப்பாகத் தெரியவில்லையே
.... அப்போது கூட இவன் அப்பா தாசில்தார். என் அப்பா ஒரு சாதாரண
குமாஸ்தாதான்... அப்போது இந்த வித்தியாசம் உறைக்கவில்லையே.... இப்போது
மட்டும் ஏன்...?
கிளம்பினான். முன்பெல்லாம் பிரிய மனமில்லாமல், அம்மாவின் "கதவையே
அப்புறம் திறக்க மாட்டேன்" பயமுறுத்தல்களுக்குப் பின் அரை மனதாகப் பிரிந்து
அவரவர் வீடு திரும்பும் அந்த நிகழ்வு இப்போது எனக்கு ஒரு விடுதலையாகப்
பட்டது. ஏதோ ஒரு செயற்கைச் சூழலில் மூச்சுத் திணறலலிருந்து விடுபட்டு
காற்றோட்டமான சூழலுக்கு வந்தது போல இருந்தது.
"இவர்தானே நீங்கள் சொன்ன அந்த குர்பானிப் பாட்டு நண்பர்... இப்போ..."
ஏதோ சொல்ல வந்த மனைவி என் முகத்தைப் பார்த்து நிறுத்தி விட்டு, "ப்ரியா...
சாப்பிட வா.... நேரமாவுது பார்... ஹோம்வொர்க் செய்யணும் வா..." என்றபடி
உள்ளே சென்று விட்டாள்.
என் மனைவியும், என் பெண்ணும் என்னை ஏதோ அனுதாபத்துடன் பார்ப்பது போலத்
தோன்றியதால், சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பி கொஞ்ச தூரம்
நடக்கலாம் என்று வந்து விட்டேன். ஒருவேளை அது என் பிரமையாகவும் இருக்கலாம்.
என் அகத்தின் ஓட்டம் அவர்கள் முகத்தில் தெரிவதாக பயந்தேனோ என்னவோ....
இப்போதைய நண்பர்களில் ஒரே ஒருவன் எனக்கு நெருக்கம். அவனுக்கு ஃபோன்
பேசி வெவ்வேறு விஷயங்கள் பேசினேன். ஏனோ எனக்கு அது தேவையாய் இருந்தது.
மறுநாள் கணேஷுக்கு ஃபோன் செய்து சேரன் வந்து சென்ற விஷயத்தை ஒரு
சம்ப்ரதாயம் போலவே சொன்னேன். வேறு ஏதும் குறையாகப் பேசவில்லை. சேரனும்
அப்புறம் ஃபோனிலும் பேசவில்லை. நேரிலும் மறுபடி வரவில்லை.
நானும் இவர்களோடெல்லாம் மறுபடி பேசவில்லை. காலம் மாற்றி விடும் மன
உணர்வுகளைப் பற்றி, மறந்து விடும் பழசுகளை, நட்பைப் பற்றி அவ்வப்போது யோசனை
ஓடும். அந்தஸ்து நட்பை மறக்கடித்து விடுகிறது என்று கசப்புடன் நினைத்துக்
கொள்வேன்.
கதை இங்கு முடிந்து விடுகிறதுதான். $$ ஆனால்....
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு....
கடைக்குப்
பெண்ணுடன் வந்து விட்ட மனைவியுடன் பெண்ணுக்கு சில பர்சேஸ் செய்ய
கடைத்தெரு கிளம்பினேன். கடையில் வேலை செய்யும் பையன்களிடம் ஆயிரம் முறை
எச்சரிக்கைச் சொல்லி பதினோரு மணிக்குத்தான் கடையை அடைக்கவேண்டும் என்று
சொல்லி, பூட்டி, சாவியை வீட்டுக்குப் போகும் வழியில் என் வீட்டில் கொடுத்து
விடச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
பர்சேஸ்கள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
வீடு திரும்ப மனைவி வலது புறம் திரும்ப, நான் அவளை நேராகச் செல்ல அழைத்தேன்.
"எதுக்குங்க சுத்திப் போகணும்.... இப்படிப் போனா அஞ்சு நிமிஷத்துல வீடு சேர்ந்துடலாம்..."
"இல்லப்பா... நேராப் போனா கீரை இருந்தா வாங்கிப் போயிடலாம்...."
"சும்மா
விடாதீங்க.... இதோ இங்க கிடைக்காத கீரையா.... தெரியுங்க.... அங்க உங்க
இன்னொரு ஃபிரண்டு வேலை பார்க்கற கடை இருக்கு... டீக்கடைல வடை போடறவரு...
அவரை அவாய்ட் செய்யணும் உங்களுக்கு... கடை என்ன கடை... தெருவில் கடை
வச்சிருக்கார்... இதோ பாருங்க... இன்னிக்கி யாரோ தலைவர் வராருன்னு தெருக்கடைகளைத் திறக்க விடாம செஞ்சிருக்காங்க போலீஸ்காரங்க.... அபபடி என்ன
உங்களுக்கு?... அவரும் உங்கள் சிறுவயதுத் தோழர்தானே...."
அவள் காட்டிய திசையில் தெருவோரக் கடைகள் இன்றி, தலைமைத் தபால் நிலையம்
ஒட்டிய தெரு பூரா சுத்தமாக இருந்தது. பேசாமல் அவள் பின் நடந்தேன்.
$$ கதை 'அங்கு' முடிந்தபின் ஆனாலுக்கு அப்புறம் படித்ததைப் பிடிக்காதவர்கள், இந்தக் கடைசி பகுதியை மறந்து விடலாம்!

























